கதிர் விஜயம்

நன்றை வெறுப்பது நன்றன்று நன்றல்ல போற்றுவதும் அன்று சிறப்பு!

இன்று ராமாயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு அதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருந்தது. அதைப் பற்றிய ஒரு எகஸ் தள பதிவு ஒன்று கண்டேன். அதாவது தமிழகத்தில் ராவணனுக்கு ரசிகர்கள் இருப்பதாகவும் ராமனுக்கு ரசிகர்கள் இல்லாதது போலவும் சித்தரித்து இருந்தார்கள். அதை தொடர்ந்து ராமனை விட ராவணன் உயர்ந்தவர் என்பது போல பல பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

அந்த திரைப்படத்தின் நடிக-நடிகையரின் தேர்வுகளைப்பற்றிய விமர்சனம் நமக்கு இருந்தாலும் கடவுளின் அவதாரமாக இருக்கும் ராமனை விட ராவணணே எங்களுக்கு பெருமை; ராவணனே எங்கள் மன்னன்; ராவணனே எங்கள் தலைவன் என தீப்பொறி (fire)பறக்க பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

ராவணனுக்கு பயர் விடும் நீங்கள், இராவணன் சீதையை  இலங்கைக்கு கவர்ந்து வந்த பின்பு இராவணனின் மனைவியான மண்டோதரியின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முற்படுங்கள், ஒருவேளை நீங்கள் புரிந்து கொண்டால்,நீங்கள் ராவணனை ஒரு போதும் கொண்டாட மாட்டீர்கள்.

பொதுவாக எல்லா இதிகாசங்களும் நன்மை தீமைகளை பிரித்து எவ்வாறு வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதி போதிக்கும் புராணங்களாவே இருக்கின்றன. ஆனால், சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக தீமைகளையும் தீய விஷயங்களையும் ஆதரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

இராவணனுக்கு ஃபயர் விடும் பலருக்கு தெரியாத ஒன்று இராவணன் இலங்கையில் பிறக்காத வட இந்தியாவில் பிறந்த ஒரு பிராமணர். இராமாயணத்தை பொறுத்தவரை எல்லா கதாபாத்திரங்களும் நல்ல மற்றும் தீய குணங்களை கொண்ட கலவையாகவே இருக்கும். இராவணன் சிறந்த பக்திமான்; நல்ல நிர்வாக திறன் உள்ள ஆட்சியாளன்; பல அற்புதக் கலைகளை கற்ற கலைஞன் என்பதில் நமக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அவனின் சீற்றமும் அகங்காரமும் அவனின் போக்கை எப்படி மாற்றியது என்பது தான் அவனுடைய வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. தர்மத்தை பின்பற்றுபவர்களை ஏமாளிகளாகவும், கோமாளிகளாகவும், வில்லன்களாகவும், அதர்மத்தின் வழியில் செல்பவர்களை வீரர்களாகவும், கதாநாயகர்களாகவும் பார்க்கும் போக்கு இப்பொழுது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இராமாயணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களது குணங்களை அந்த அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளிப்படுத்துவர். அதில், இராமன் சில தவறுகளை செய்தாலும், அனைவரையும் விட அதிகமாக தர்மத்தினை கடைப்பிடிப்பார். கடினமான சூழல்களிலும் தர்மத்தின் வழி நின்றதன் காரணமாய் அவனைப் போல் இருக்க வேண்டும் அவனை நாயகனாக்கி இதிகாசம் படைத்தார்கள். இராவணன் போல் இருக்க வேண்டும் என்று எண்ணி ராவணனை நாயகனாக்கி இதிகாசம் படைக்கவில்லை.

நல்ல எண்ணங்களை ஆதரியுங்கள் ;நல்லவர்களை ஆதரியுங்கள்; நல்லதை ஆதரியுங்கள்; உங்கள் குழந்தைகளுக்கும் நல்லதை மட்டுமே சொல்லிக் கொடுங்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த ராமனை முன்மாதிரியாக கொள்ளாது பிறர் மனை கவர்ந்த ராவணனை தலைவனாக முன்மாதிரியாக கொள்வது நல்ல சமூகத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கம்.

நன்றை வெறுப்பது நன்றன்று நன்றல்ல

போற்றுவது மன்று சிறப்பு

Error happened.
Exit mobile version